விருமாண்டி

நடிகர்கள்: கமல்ஹாசன், பசுபதி (கொத்தாளத் தேவர்), அபிராமி (அன்னலட்சுமி), நெப்போலியன் (நல்லம நாயக்கர்)
இசை: இளையராஜா
இயக்கம்: கமல்ஹாசன்

ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை எதிர்கொண்டு சிறப்பான படமொன்றை அளிப்பது மிகக் கடினமான வேலை.. அதனை ஓரளவு (கவனிக்கவும், ஓரளவு) நடத்திக்காட்டியிருக்கும் இயக்குனர் கமலுக்கு முதலில் நமது பாராட்டுக்கள். இந்தப் படத்திற்குப் போய், அந்தத் தலைப்புக்குப் போய் ஏன் எதிர்ப்புத் தெரிவித்தோம் என்று சிலர் வெட்கப்படும்படி படமெடுத்த இயக்குனர் கமலுக்கும் நமது பாராட்டுக்கள்.

விருமாண்டியில் நல்ல திரைக்கதை உண்டு. அழுத்தமான காட்சிகள் உண்டு. அழகான வசனங்கள் உண்டு. ஆனால், பல வேறுபட்ட களங்களின் மேல் இவை பயணம் செய்வதால் எடுத்துக் கொண்ட மையக் கருத்துக்கு போதுமான ஆழம் கிடைக்கச் செய்வதில் அவை தவறி விடுகின்றன.

தூக்குத் தண்டனை குறித்த சிந்தனை, சிறைச்சாலைகளில் நடக்கும் சட்ட மீறல்கள் குறித்த கேள்விகள், கிராம விவசாயம் மற்றும் தண்ணீர்ப் பிரச்சினை பற்றிய பார்வைகள் என்று பல களங்களின் ஆளுமையில் விருமாண்டி சிக்கித் தவிப்பதால் முழு மனதாக ஒன்ற முடியவில்லை.

ஒரே சம்பவங்களை, கொத்தாளத் தேவர் முதலில் சொல்லும் போது தன் வசதிப்படி சுருக்கிச் சொல்கிறார்.. விருமாண்டி குறித்த நமது சந்தேகங்கள், தொடர்ந்து விருமாண்டியே தன் கதையை விரிவாகச் சொல்லும் போது அகலுகின்றன. சிறப்பான கதை சொல்லும் உத்தியைக் கடைப்பிடித்திருக்கிறார்கள்.

சுற்று வட்டாரத்திலேயே இருபதடியில் தண்ணீர் கிடைக்கும் கிணறு உடைய விருமாண்டியின் நிலம் மீது அவன் ஊரைச் சேர்ந்த கொத்தாளத் தேவர், பக்கத்து ஊரைச் சேர்ந்த நல்லம நாயக்கர் இருவருக்கும் ஒரு கண். நல்லம நாயக்கருக்கு எதிராகக் கொத்தாளத் தேவரால் பகடைக் காயாகப் பயன்படுத்தப் படுகிறான் விருமாண்டி. கொத்தாளத் தேவரின் அண்ணன் மகள் அன்னலட்சுமிக்கும் விருமாண்டிக்கும் காதல். அவளுக்குக் கொத்தாளத் தேவர் மீது வந்த சந்தேகம் தீராதபடியால் இருவரும் கள்ள மணம் புரிந்து கொண்டு வேற்றூர் செல்கிறார்கள். அன்னலட்சுமி அங்கிருந்து கவர்ந்து வரப்பட்டு, தற்கொலை செய்து கொள்கிறாள். அவளைக் கற்பழித்த பழியும், பழைய கொலைகளின் பழியும் விருமாண்டி மீது விழுமாறு கொத்தாளத் தேவர் சதி செய்கிறார். வெகுண்டெழும் விருமாண்டியின் சீற்றத்துக்கு பல உயிர்கள் பலியாகின்றன.. இடையில் விருமாண்டிக்குத் தஞ்சம் அளித்த நல்லம நாயக்கரை கொத்தாளத் தேவர் கொல்கிறார். விருமாண்டிக்குத் தூக்குத் தண்டனையும், கொத்தாளத்தேவருக்கு ஆயுள் தண்டனையும் என்று தீர்ப்பாகிறது.

தூக்குத் தண்டனையை அகற்ற வேண்டுமென்ற நோக்குடன் ஆராய்ச்சி செய்து வரும் ரோகிணி, சிறையில் இவர்களின் கதையைப் பதிவு செய்கிறார். நேர்மையான ஜெயிலரைக் கொல்ல சதி செய்யும் வார்டனின் திட்டம் குறித்து அறிந்து அங்கிருந்து தப்ப முயலுகையில், திட்டமிட்ட கலவரம் உருவாக்கப் படுகிறது. இறுதியில் கொத்தாளத் தேவர் மடிந்து, விருமாண்டி ரோகிணிக்கு உதவி, அவரது கருணை மனு குறித்த சன் டிவி சிறப்புப் பார்வையுடன் படம் முடிவடைகிறது.

வசனங்கள் அத்தனையும் கன ஜோர். காளை மாட்டை மொபட்டில் கட்டிக் கொண்டு அபிராமி செல்லும் போது கமல் அவரைச் சீண்டியபடியே செல்லும் காட்சி ஒன்று போதும் சாட்சிக்கு. குபீர் ஜாலி பிரதர்ஸ் என்று செட்டு சேர்த்துக் கொண்டு கமல் அடிக்கும் கும்மாளங்கள் அத்தனையும் கிராமத்து மண்ணின் வெள்ளந்தி மணம் கமழும் காட்சிகள். ரசிக்கத்தக்கவை. மிக மிக. அப்பத்தா மடிந்து விடும் காட்சியில் விருமாண்டி பேசும் வசனங்கள் கொஞ்சம் அதிகப்படி என்றாலும், சண்டியர் வேறெப்படிப் பேசுவான் என்ற சமாதானம் உண்டு, நம்பும்படியாக.

இசை பற்றி என்ன சொல்ல.? இளையராஜா இப்போது தரும் இசை, அவரது நீண்ட அனுபவத்தின் உதவியோடு அவர் நமக்குப் போடும் பிச்சை. அதையும் பாத்திரமறிந்து போடுகிறார் பாருங்கள், அதுதான் அவரது சிறப்பு. "மாட விளக்கை யாரு இப்போ தெருவோரம் ஏத்தினா", "சண்டியரே சண்டியரே", "கொம்புல பூவச் சுத்தி" என்று எல்லாம் ஒரே அட்டகாசம். பொருத்தமான பிண்ணனி இசை. (ஆனாலும், எப்படி எடுக்கப் போகிறார்கள் என்று நான் மிகவும் எதிர்பார்த்த "கருமாத்தூர் காட்டுக்குள்ளே ஒரு காலத்தில்" மற்றும் "கொட்டை எடுத்து வையி.." ஆகிய பாடல்கள் படத்தில் இடம்பெறவில்லை. தியேட்டர்காரர் சதியா என்று தெரியவில்லை.)

வன்முறைக் காட்சிகள் கொஞ்சம் அதிகமே. அதிலும், கைகள், கால்கள், தலைகள் எல்லாம் துண்டாக சீவப்படுவது போல இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிராத தத்ரூபக் காட்சிகள் மனதைப் பிசைகின்றன.

ஜல்லிக்கட்டு காட்சியின் போது காமிரா புகுந்து விளையாடுகிறது. "ஒன்னை விட.." பாடலில் இரவின் கருநீலப் பின்னணியில் சில காட்சிகள் செதுக்கி வைத்த கவிதைகள்.

ஆர்ட் டைரக்டரின் உழைப்புக்கு ஒரு ராயல் சல்யூட். விருமாண்டி கோயில், குளம், கோர்ட் வளாகம், சிறை என்று அசத்தியிருக்கிறார்.

பார்வையாளர்களுக்கு அன்பே சிவம் தந்த திருப்தியை விருமாண்டி தரவில்லை. ஆனால், கமல்ஹாசனுக்கு அன்பே சிவம் தராத வெற்றியை விருமாண்டி தரக்கூடும். அடுத்தொரு அன்பே சிவம் கிடைப்பதற்காக, இடையில் ஒரு விருமாண்டியை ஆதரிப்பதில் தவறில்லை. (அன்பே சிவத்தை வெற்றியாக்காததற்குப் பிராயச்சித்தமாகவும்..!!)

ரசிக்கத்தக்க படம்.
Old Commenting System: |

Very Old Commenting System:

கோவில்

நடிகர்கள்: சிம்பு, சோனியா அகர்வால், ராஜ்கிரண், நாசர், வடிவேலு
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: ஹரி

அப்பாடா, சில்லறை சேட்டைகள் ஏதுமில்லாமல் சிம்புவின் முதல் படம். அதற்காக இயக்குனர் ஹரிக்கு ஒரு ஓ போட்டு இந்த விமர்சனத்தை துவக்கலாமா??

அலைகள் ஓய்வதில்லை படத்தின் இந்துப் பையன், கிறித்தவப் பெண் காதல் கதையை, இரு ஊர்களின் மதப் பிரச்சினையோடு கலந்து ஒரு ருசியான தயிர்சாதம் பரிமாறியிருகிறார் ஹரி. "சாமி" படத்தில் பிரியாணி தருகிறேன் என்ற பெயரில் சில எல்லைகளை அங்கங்கே கடந்திருந்தார். இதில் சுத்தமான, அப்பழுக்கற்ற தயிர்சாதம். (குடும்பப் படம்..)

முதலில் சொன்னது போல் சிம்புவை அநாவசியமான கை விளையாட்டுக்கள் செய்ய விடாமல், "நான் பெரிய பருப்பு" என்பது போன்ற வசனங்கள் இல்லாமல் ஒழுங்கு புள்ளையாக வந்து போக வைத்திருக்கிறார். "காலேஜுக்குப் போவோம் கட்டடிக்க மாட்டோம், கோவிலுக்குப் போவோம் சைட்டடிக்க மாட்டோம்" என்ற அறிமுகப் பாடலில் வருவது போல் தரமான பையன் தான் சிம்பு. புளியங்குளம் என்ற இந்துக்கள் மிகுந்த ஊரில் மரியாதைக்குரிய ராஜ்கிரண் குடும்பத்தின் ஒரே வாரிசு. பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரிக்கு இப்போ தான் போக ஆரம்பிக்கிறார்.

வேப்பங்குளம் என்பது பக்கத்தில் கிறித்துவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர். அங்கே மரியாதைக்குரிய நாசரின் மகள் ஏஞ்சல் தான் சோனியா அகர்வால். பெயருக்கேற்ற மாதிரி படம் முழுக்க ஏஞ்சல் மாதிரி இருக்கிறார். படம் முழுக்க தாவணியில் ரொம்ப க்யூட்டாகத் தான் இருக்கிறார். இவரும் பள்ளிப் படிப்பு முடித்து சிம்பு படிக்கும் காலேஜில் போய்ச் சேருகிறார்.

ஏற்கெனவே இரு ஊர்களுக்கும் அடிக்கடி மதக்கலவரம் ஏற்பட்டு வரும் சூழ்நிலையில், சிம்புவும் சோனியாவும் காதல் வயப் பட நேரிடுகிறது. அதனால் வரும் பிரச்சினைகள் மற்றும் முடிவினை சுவாரஸ்யமாகச் சொல்வதில் இயக்குனர் வெற்றி பெறுகிறார். முடிவு மட்டும் கொஞ்சமே கொஞ்சம் சொதப்பல். பரவாயில்லை, மன்னிக்கப்படலாம்..

சிம்புவின் கதாபாத்திரம், "தம்பி தங்கக் கம்பி" என்பது போல். குறைவில்லாமல் ஜொலிக்கிறார் சிம்பு. நடனம், சண்டைக்காட்சிகள் இரண்டிலும் அவரது திறமை பளிச்சிடுகிறது.. முகபாவங்களையும், நடிப்பையும் இன்னும் கொஞ்சம் மெருகேற்றினால், சிறப்பாக பரிமளிக்க முடியும்.

சோனியா அகர்வாலுக்கு காதல் கொண்டேன் போலவே தேவதை கதாபாத்திரம். வெட்கப்படுவது முதல், உணர்ச்சி வசப்பட்டு அழுவது வரை நன்றாகவே செய்கிறார். இளம்பெண்களுக்கு தாவணி ரொம்ப அழகான உடை என்ற பரவலான எண்ணத்தை மீண்டும் நிரூபிக்கிறார்.

ராஜ்கிரண் கண்ணியமான பாத்திரத்தை திறமையாகச் செய்திருக்கிறார். ஊர் நன்மைக்காக ரொம்ப அடங்கிப் போவது போல் இருப்பதை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

நாசரின் கதாபாத்திரம் ரொம்ப அடாவடி என்பதால் சினிமாத்தனமாக இருப்பதாக நமக்கு ஒரு உணர்வு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.. ஆனாலும் நாசர் அதை மீறிப் பின்னுகிறார். வண்டியில் அவர் போய்க் கொண்டிருக்கும் போது பின்னால் வரும் லாரி, வழி கேட்டு ஹாரன் அடிக்க, இவர் வண்டியை நிறுத்தி இறங்கி, லாரி டிரைவரை அழைத்து ஓங்கி ஒரு அறை விட்டு, "பெரிய இவனா நீ?? வேப்பங்குளம் போய்ச் சேர்ற வரைக்கும் பின்னாலயே வா.." என்று அதிரடி காட்டுகிறார். படம் முழுக்க அதை maintain செய்கிறார்.. ஆனால் கடைசியில் பாவம் இவரது பாத்திரத்தை ரொம்ப சொதப்பி விடுகிறார்கள்..

புல்லட் பாண்டி என்ற பெயரில் சிம்புவின் சித்தப்பாவாக வரும் வடிவேலு ஒரு டுபாக்கூர் பேர்வழி.. சிலம்பம் கற்றுத்தரும் மாஸ்டராக படம் முழுக்க ஒரு அல்டாப்பு ராஜாங்கம் நடத்துகிறார்.. சிம்புவுக்கு ஒன்று என்றதும் அரிவாளோடு கிளம்பி விடும் அவரது "வீரத்தை" ரசிக்காமல் இருக்க முடியாது. சிம்புவின் கனவில், நாசரும் அவரது அடியாள்களும் வீடு புகுந்து வடிவேலுவை வெட்டுவது போல் வருகிறது என்பதைக் கேட்டுவிட்டு, "அப்பக் கூட பிரச்சினையின்னா உன்னைத் தானே வெட்டணும்?? என்னை எதுக்கு?? கனவில கூட ஒரு நியாய தர்மம் வேண்டாமா..??" என்று பரிதாபமாக அவர் புலம்புவது நல்ல நகைச்சுவை. ஆனால் இரண்டாம் பாதியில், மிருகங்களால் அவருக்குக் கண்டம் என்று ஜோசியர் சொல்லிவிட அவர் நாய், மாடு, யானை என்று பயந்து நடுங்குவது அவ்வளவு சிறப்பாக இல்லை..

படத்தில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் வசனங்கள். அங்கங்கே மனசைத் தொடுகின்றன நாகர்கோவில் மண்வாசனையோடு எழுதப்பட்டிருக்கும் அழகான வசனங்கள். ஒரு இடத்தில் சோனியாவும் அவரது வேப்பங்குளத்துத் தோழிகளும் கல்லூரிக்குச் செல்லும் பஸ் வழியில் நின்றுவிட, பரீட்சைக்கு நேரமாகி விட்டதால் வேறு வழியில்லாமல் சைக்கிளில் செல்லும் சிம்பு மற்றும் அவரது நண்பர்களோடு செல்கிறார்கள்.. இதனைக் கேள்விப்பட்டு பெண்களின் பெற்றோரெல்லாம் அவர்கள் திரும்பி வந்ததும் கண்டபடி பேசி விட, அங்கு செல்லும் சிம்பு, "உங்க பொண்ணுங்க மேல கூடப் படிக்கிற பசங்களா நாங்க வச்சிருக்கிற நம்பிக்கையும் மரியாதையும் கூட ஒரு அப்பா-அம்மாவா நீங்க வைக்கலையே, சே..!!" என்று வெடிப்பது அருமை.

அதே போல் இன்னொரு இடத்தில், "பார்த்து பேசிக்கிட்டு இருந்தா மட்டும் தான் காதல்-னு இல்லை.. நெனைச்சுக்கிட்டு இருந்தாலே காதல் தான்.." வசனகர்த்தா வாழ்க..!!

சோனியாவின் அண்ணனுக்கு எதிராக சிம்பு-சோனியா அடிக்கும் காதல் லூட்டிகள் நயமாகக் கையாளப் பட்டிருக்கின்றன. ஒரே ஒரு தொலைபேசியை வைத்துக் கொண்டு நல்ல நகைச்சுவையாகக் காட்சி அமைத்திருப்பது இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது.

இசை ஓகோவென்று சொல்ல முடியாவிட்டாலும், ரசிக்க வைக்கிறது.. காலேஜுக்குப் போவோம், காதல் பண்ண, கொக்கு மீனைத் திங்குமா ஆகிய மூன்று பாடல்களுக்காக ஹாரிஸ் ஜெயராஜ் பாஸ்-மார்க் பெறுகிறார்.

சாமி படம் மூலம் சூப்பர் ஸ்டார் படத்துக்கு வலுவான அப்ளிகேஷன் போட்ட ஹரி, இரண்டாவது ரவுண்டிலும் தேறி விட்டார் என்றே சொல்ல வேண்டும்.

சிம்புவுக்கு முதல் வெற்றிப்படமாக கோவில் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒரு சிக்ஸர் அடித்து, தனுஷ்-சிம்பு ரேசில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறார் சிம்பு. புதுக்கோட்டையிலிருந்து வரும் சரவணன் என்ன ஆவார் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்து விடும்.
Old Commenting System: |

Very Old Commenting System: