சரவணா

நடிகர்கள்: சிம்பு, ஜோதிகா, பிரகாஷ்ராஜ், நாகேஷ், விவேக்
இசை: ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்: கே.எஸ்.ரவிகுமார்

வழக்கமான கே.எஸ்.ரவிகுமாரின் MTR மசாலா பிராண்ட் திரைப்படம். தமிழகத்தில் இன்னமும் சமூகத்தில் நிலவிக் கொண்டிருக்கும் அரிவாள் வெட்டு குத்து, ஜாதி வெறி கலாசாரம் பற்றிய ஒரு திரைப்படம். கூடவே தன்னைத் தானே மன்மத --- என்று நினைத்துக் கொள்ளும் சிம்புவும் இணைந்திருப்பதால் படம் எந்த மாதிரி இருக்கும் என்று நீங்களே ஊகித்துக் கொள்ளலாம்.

சிம்புவும் அவரது நண்பரும் பெங்களூரில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். நண்பனின் தங்கை ஜோதிகா. அவர் லண்டனில் படித்துக் கொண்டிருப்பவர். அவரை வீடியோவில் பார்த்துக் காதல் வசப்பட்டு விடுகிறார் சிம்பு. படிப்பு முடித்து சிம்பு சென்னைக்குத் திரும்பும் போது கலங்கிய விழிகளுடனான ஜோதிகாவோடு வந்து இறங்கி வீட்டிலிருப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். அவர்களின் பின்கதை என்ன, இருவரும் காதலிக்கிறார்களா, இணைகிறார்களா, இன்ன பிற கேள்விகளுக்கு விடை அளிப்பது திரைப்படம்.

திரைக்கதை ஓரளவு போரடிக்காமல் நகர்கிறது என்பதோடு அந்தப் பேச்சை விட்டு இடலாம்.

சிம்புவின் அறிமுகம் வழக்கம் போல தனுஷுக்கு சில செய்திகளைத் தெரிவிப்பதோடு ஆரம்பமாகிறது. என்றைக்கு நிறுத்தித் தொலைக்கப் போறாங்களோ? சிம்புவின் மேல் ஒரு தலையாகக் காதல் கொள்ளும் மாமா பெண், ஒரு கனவுப் பாடலுக்கு பயன்பட்டிருக்கிறார். மற்றபடி சிம்பு நடிப்பு, காமெடி, சண்டைக் காட்சி எல்லாவற்றிலும் வஞ்சனை இல்லாமல் சூப்பர் ஸ்டாரைக் காப்பியடித்திருக்கிறார். வேகமான வசன உச்சரிப்பு, ஸ்டைல், என்று எல்லாமே. வயிறு எரிந்தது எனக்கு. ஆனாலும், நண்பனின் தங்கையைக் கவரும் விதமாக சிம்பு செய்யும் சில சேஷ்டைகள் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. நடனத்தில் வழக்கம் போல் பின்னியெடுத்திருக்கிறார். அதற்காகப் பாராட்டலாம்.

அழகான ஜோதிகா. வழக்கம் போல. ஆனால் மன்மதன் படத்தை விட தற்போது சற்றே வெயிட் போட்டிருப்பதால், மன்மதன் அளவுக்கு சிம்புவுக்குப் பொருத்தமான ஜோடி என்று சொல்ல முடியாது. (கல்யாண சேதி முடிவு செய்து விட்ட பூரிப்போ?) லண்டனிலிருந்து ஊர் திரும்பும் ஜோதிகாவுக்கு அவரது அண்ணி ஆரத்தி எடுக்கும் போது 'நாய் கண்ணு, நரி கண்ணு, பேய் கண்ணு, பூதம் கண்ணு' என்று ஒவ்வொன்றாகச் சொல்ல, அதற்கு ஏற்றாற்போல் ஜோதிகா தன் முழியை மாற்றி மாற்றி வித்தை காட்டுவது அருமை.

படத்தின் மிகப் பெரிய ஆறுதல், ஜோதிகாவின் அண்ணனாக வரும் பிரகாஷ்ராஜ். குணசித்திர வேடத்தில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார். ஊர்த் திருவிழாவின் போது சிம்புவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு தன் தம்பியின் தோள் தட்டிச் செல்லும் ஒரு காட்சியில் என்னமாய் முகபாவங்கள் காட்டுகிறார். அவருக்கு ஒரு சல்யூட். அவரும் அவரது மனைவியும் BITS பிலானியில் படிக்கும் போது காதலித்துத் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லும் போது தியேட்டரில் பலத்த சிரிப்பலைகள். அந்தக் கலப்புத் திருமணத்தால் ஜாதிக் கலவரங்கள் நடந்து, இரு ஊர்கள் விரோதித்துக் கொள்வதே படத்தின் மையக் கரு என்பதால் பொறுத்துக் கொள்ளலாம்.

திரைக்கதை அமைக்கும் போது பார்வையாளர்களுக்கு அரிவாள் கலாசாரத்தின் தீவிரத்தை உணர்த்தும் படியான காட்சிகளுக்கு ரொம்ப மண்டையைப் பிய்த்து யோசித்திருக்கிறார்கள் என்று புரிகிறது. அந்த ஊரின் கோவிலில் கடவுளுக்கு நேர்த்திக்கடனாக அரிவாளைத் தான் செலுத்துகிறார்கள். கோவில் மண்டபங்கள் முழுக்க அரிவாள்களாகக் குவித்து ஆயுதக் கிடங்கு மாதிரி இருக்கிறது. 'என்னடா நடக்குது இங்கே?' என்று தீவிர அதிர்ச்சிக்குள்ளாக்கும் காட்சிகள் இவை.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்களும் பிண்ணனி இசையும் வெகு சுமார். கடைசியாக வரும் 'என்னை மட்டும் வேணாம் சொல்லாதே' பாடல் இன்னொரு மன்மதன் - என் ஆசை மைதிலியே. சிம்புவும் ஜோவும் கலந்து கட்டி ஆட்டத்தில் ஜாலம் செய்கிறார்கள். வெரிகுட்.

சிம்புவின் தாத்தாவாக நாகேஷ் செய்யும் கூத்துகள் கொஞ்ச நேரம் சிரிக்க வைக்கின்றன. விவேக் சுத்தம். மூன்று காட்சிகளில் தலையை மட்டும் காட்டிவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறார்.

மொத்தத்தில் ஒரு சுமாரான, வழக்கமான, பொழுதைப் போக்கும் படம்.

1 Comments:

Blogger Boston Bala said...

மன்மதன் படத்தில் ஜோதிகா முகப்பூச்சு இல்லாமல் வந்திருந்தார்? இங்கே மேக்கப்புடன் வந்திருக்கிறாரோ...

---விவேக் சுத்தம். மூன்று காட்சிகளில் ---
:-(( (ஒரு காட்சியை ஆல்ரெடி சன் டிவியில் போட்டு விட்டார்களே)

1:57 pm  

Post a Comment

<< Home

Old Commenting System: |

Very Old Commenting System: