திருமலை


நடிகர்கள்: விஜய், ஜோதிகா, ரகுவரன், மனோஜ் கே. ஜெயின், விவேக்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: ரமணா

நீண்ட நாட்களாச்சு, விஜய்யை ஒரு நல்ல ரோலில் பார்த்து.. அதிரடி தாதா (பகவதி), புரட்சிகரமான இளைஞன் (புதிய கீதை), soft romantic காதலன் (வசீகரா) என்று எதுவுமே திருப்தியளிக்காத நிலையில் "திருமலை" அந்தக் குறையை ஓரளவு நிவர்த்தி செய்யும் வகையில் வந்திருக்கிறது.. மேலே குறிப்பிட்ட மற்ற படங்களைப் போல் இதிலும் அங்கங்கே தேவையில்லாத சில வசனங்கள் உண்டென்றாலும், கட்டுக்கோப்பான காட்சிகளோடு படம் நிறைவை அளிப்பதால் அவற்றை மன்னித்து விடலாம்..

அநாதையான புதுப்பேட்டை மெக்கானிக் பாத்திரத்தில் விஜய் புகுந்து விளையாடியிருக்கிறார்.. அதிரடியான, யாருக்கும் எதற்கும் பயப்படாத ஒரு கேரக்டர்.. அதே நேரத்தில் பொறுப்பான முடிவுகளை எடுக்கும் இளைஞனாகவும் இருக்கிறார்.. ஒரு cute, lovable ராஸ்கல் எனலாம்.. சிறப்பான பாத்திரப் படைப்புக்காக இயக்குனர் ரமணாவைப் பாராட்டலாம்.. குறிப்பாக விஜய்யின் நண்பன், வேறொருவருடன் திருமணம் நடக்கவிருக்கும் தன் காதலியை, கல்யாண மண்டபத்திலிருந்து அழைத்து வந்து விட, விஜய் அவர்களுடன் மண்டபத்துக்கே மீண்டும் சென்று அனைவருக்கும் திருப்தி அளிக்கும் விதத்தில் அந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கும் காட்சியில் விஜய்யின் பாத்திரத்தின் இயல்பு அழகாக வெளிப்படுகிறது..

கதை ரொம்ப சாதாரணம் தான்.. ஒரு புதுவருட நாளன்று ஜோதிகாவை சந்திக்கிறார் விஜய்.. அன்று பார்க்கும் முதல் நபர் என்று ஜோதிகா அவரை வாழ்த்தி விட்டுப் போக, எதிர்பாராமல் அதற்குப் பிறகு எல்லாம் நல்லதாகவே நடக்கிறது விஜய்க்கு.. இதனால் ஜோ மேல் விஜய்க்கு ஒரு அபிமானம்.. பக்கத்து வீட்டில் குடியிருக்கும் ரகுவரன், கவுசல்யா தம்பதியிடம் பேசும்போது அது காதல் என்று உணர்கிறார்.. ஜோவிடமும் சொல்லிவிடுகிறார்.. முதலில் புரிந்து கொள்ளாமல் சற்று முரண்டு பிடிக்கும் ஜோதிகா, பிறகு காதலை ஏற்றுக் கொள்கிறார்..

ஜோவின் அப்பா, ஒரு பெரிய தனியார் தொலைக்காட்சி சாம்ராஜ்யத்தின் அதிபர்.. சும்மா இருப்பாரா..?? 'அரசு' என்ற பெயரோடு தமிழகத்தையே கலக்கும் ஒரு தாதாவின் மூலம் காதலுக்குத் தடை போட முயலுகிறார்.. அதை மீறிக் காதல் ஜோடி சேர்வது தான் மீதிக் கதை என்று நான் சொல்ல்லவும் வேண்டுமோ..??

விஜய்யின் தொடர்ச்சியான காதல் கலாட்டாக்களில் வெறுப்படையும் ஜோ, ஒரு கட்டத்தில் சும்மானாச்சுக்கும் விளையாட்டுக்கு "ஐ லவ் யூ" என்று சொல்லும் போது அதைப் புரிந்து கொள்ளும் விஜய் ஒரு பொங்கு பொங்குகிறார் பாருங்கள்.. அருமையான காட்சி அது.. "உனக்கு என்னைப் பிடிக்கலைன்னா கூடப் பரவாயில்லை.. கடைசி வரைக்கும் அதையே அடிச்சு சொல்லிடு.. நான் தாங்கிப்பேன்.. ஆனா பொய் சொல்லாதே.. ஏன்னா நீ என் தேவதை.. என் தேவதை பொய் சொன்னா என்னால தாங்கிக்க முடியாது.. பழி வாங்குறதுக்கு காதலை தயவு செஞ்சு ஆயுதமா உபயோகிக்காதே.." என்று வெடிக்கும் கட்டத்தில் மிக நிறைவாகச் செய்திருக்கிறார் விஜய்..

படத்தின் ஆரம்பத்தில் ஒரு பைக் ரேஸ் நடக்கிறது.. விஜய் அதில் லாரன்ஸ¤க்கு விட்டுக் கொடுத்து விட்டு, "ரேஸில் ஜெயிப்பது முக்கியமல்ல, வாழ்க்கையில் ஜெயிக்கறது தான் முக்கியம்..", "எனக்கு அப்பப்போ வந்து ஓரமா நின்னு ஒத்து ஊதிட்டு போறவனை விட, எப்பவும் என் முன்னால எதிர்த்து நிக்கிறவனைத் தான் பிடிக்கும்.." என்றெல்லாம் பேசுகிறார்.. ரசிகர்களின் விசில் சத்தத்தை வைத்து ஊகிக்கும் போது அஜித்தைத் தாக்குவது போலத் தெரிகிறது.. தவிர்க்கப்பட வேண்டிய வசனங்கள் இவையெல்லாம்..

தாதா 'அரசு'வோடு மோதும் கட்டங்களில் விஜய் தன் எகத்தாளமான நடிப்பு மூலம் ஸ்கோர் செய்கிறார்.. குரல் மாடுலேஷனும் நக்கல் பார்வைகளும் அருமை.. நடனங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம்.. வித்யாசாகர் இதற்காகவே போட்டுத் தந்திருக்கும் குத்துப் பாடல்களில் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்.. நீண்ட நாட்களுக்குப் பிறகு எனக்கு பழைய விஜய்யைப் பார்த்த திருப்தி..!! வெல்டன்..!!

ஜோதிகாவுக்கு "குஷி" படம் அளவுக்கு இதில் வேலையில்லை.. தேவதை மாதிரி அவ்வப்போது வந்து போக வேண்டிய வேலை தான்.. (ஜோவிடம் குறை ஏதேனும் இருந்தாலும் என் கண்களுக்குத் தெரியாது என்பதால் அது பற்றி நான் சொல்வதற்கில்லை.. !!) "திம்சு கட்டை" பாடலில் cho chweet..!!

ஜோதிகாவின் தந்தையாக வரும் நடிகர் யாரோ புதுமுகம்.. எந்தக் காட்சியிலும் ரொம்ப ஒட்டவில்லை.. ஏனோ தானோவென்ற ஒரு நடிப்பு.. சுகமில்லை..

விஜய்யின் மெக்கானிக் ஷெட் அருகில் குடிவரும் தம்பதியாக ரகுவரன்-கவுசல்யா.. ரகுவரனை இந்தக் கேரக்டரில் வேஸ்ட் செய்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.. நிறைய வேலையில்லை.. யார் வேண்டுமானாலும் செய்து விடலாம்.. இருந்தாலும் ரகுவரன், மற்றவர்களிடம் இல்லாத ஏதோ ஒன்றைத் தன் கேரக்டருக்குக் கொண்டு வருவது உண்மையே.. கவுசல்யாவை விஜய்யை விட இளமையானவராகக் காட்டுவதா அல்லது மூத்தவராகக் காட்டுவதா என்ற இயக்குனரின் தடுமாற்றம் அத்தனை காட்சிகளிலும் வெளிப்படுகிறது.. வேறு யாரையாவது அந்தக் கேரக்டருக்கு உபயோகப் படுத்தி இருக்கலாம்.. ரகுவரன், கவுசல்யா இருவருமே தங்கள் பெண்பார்க்கும் படலத்தைப் பற்றிப் பேசும் காட்சியில் அருமையாக நடித்திருக்கிறார்கள்..

தாதா 'அரசு'வாக மனோஜ் கே. ஜெயின்.. புதுமையான பாத்திரம் இல்லை என்றாலும் முயற்சி செய்து கொஞ்சம் வித்தியாசம் காட்டியிருக்கிறார், பரவாயில்லை.. மெரீனா கடற்கரைச் சாலையில் கமிஷனர் அலுவலகம் எதிரே உதவி கமிஷனரை வில்லனின் ஆட்கள் என்கவுண்ட்டர் செய்வது நல்ல காமெடி..

விவேக்கின் காமெடி தனி டிராக்.. வேலைக்குப் போகும் இளைஞனுக்கு ஏற்படக்கூடிய தடங்கல்கள் என்ற கருத்திலே செய்திருக்கிறார்.. ரொம்ப சுமார் ரகம் தான்..

இசை வித்யாசாகர்.. "நீ என்பது எதுவரை எதுவரை", "திம்சு கட்டை" மற்றும் அறிமுகப் பாடல் மூன்றும் அருமை.. பின்னணி இசையிலும் நிறைவாகச் செய்திருக்கிறார்.. சண்டைக் காட்சிகளில் இசை மிரட்டுகிறது..

ஒளிப்பதிவு சிறப்பானதொரு முயற்சி.. குறிப்பாக இடைவேளைக்கு முந்தின காட்சியில் மெரீனாவில் ஜோதிகா காத்திருக்கும் நேரத்தில் க்ரேன் ஷாட்டுக்கள் அமர்க்களம்.. "நீ என்பது எதுவரை எதுவரை.." பாடலிலும் காமிரா கோணங்கள் கவிதை பேசுகின்றன..

கடைசியில் அரசுவிடம் போய் விஜய் பேசும் காட்சியில் ஒரு வசனம்.. "நீ எப்போவாவது காதலிச்சிருக்கிறியா அரசு..?? கத்தி தூக்கறதை விட கஷ்டம்..!!" வசனகர்த்தாவுக்கு ஒன்றல்ல, பல "ஓ" போடலாம்..!!

சண்டைக் காட்சிகளில் நல்ல அழுத்தம்.. பாராட்ட வேண்டிய முயற்சி..

படத்தில் obvious குறைகள் என்று சில இருந்தாலும், விஜய்யின் பாத்திரப் படைப்பில் இருக்கும் நேர்மையும், கட்டுக்கோப்பான திரைக்கதை அமைப்பும் அவற்றை மறக்க, மன்னிக்க வைக்கின்றன..

"திருமலை", நீண்ட நாட்களுக்குப் பிறகு விஜய்க்கு வைட்டமின் ஏற்றும் வெற்றிப் படம் என்பதே என் கருத்து..

Old Commenting System: |

Very Old Commenting System:

அலை


நடிகர்கள்: சிம்பு, த்ரிஷா, ரகுவரன், விவேக், குறளரசன்
இசை: வித்யாசாகர்
இயக்கம்: விக்ரம்

அண்ணாமலை படத்தில் முதன் முதலாய் ரஜினிக்கு சின்ன பல்புகள் கொண்டு ஒவ்வொன்றாய் மின்னி Super Star என்று வருமாறு செய்திருப்பார்கள்.. அதே பாணியில் சிம்புவுக்கு இந்தப் படத்தில் Little Super Star என்று ஆரம்பிக்கிறார்கள்.. ISO முத்திரை மாதிரி அவரது trademark முத்திரை வேறு.. அப்போது துவங்கும் டார்ச்சர் கடைசி வரை நம்மை விடுவதாய் இல்லை.. ஆதி என்ற கேரக்டரில் சிம்பு ரசிகர்களைக் கும்பிட்டபடி அறிமுகமாகிறார்.. அறிமுகமாகி ஒரு சல்யூட் வைத்து விட்டு ஏதாவது பேச வேண்டுமே என்ற கவலையெல்லாம் இல்லாமல், வலது கையில் பெருவிரலை மேலே தூக்கி, சுண்டு விரலை நேராக நீட்டி, மற்ற விரல்களை மடக்கிக் கொண்டு விஷ்க் விஷ்க் என்று ஆட்டி ஏதோ செய்து விட்டு "அலை அடிக்குது.. என்னை சுத்தி அலை அடிக்குது.." என்று பாட்டுப் பாடி டத் தொடங்கி விடுகிறார்.. கஷ்டம்டா சாமி..!!

பெற்றோர், தம்பி என அளவான குடும்பம்.. மொத்த குடும்பமும் சிம்புவின் மேல் பாசம் பொழிகிறார்கள்.. த்ரிஷாவோடு சிம்புவுக்கு முதலில் மோதல்.. பிறகு என்னவாகும் என்று உங்களுக்கே தெரியும்.. நண்பர்கள் வீட்டை எதிர்த்துத் திருமணம் செய்ய சிம்புவும் த்ரிஷாவும் உதவுகிறார்கள். அதனால் நண்பனின் வீட்டில் நடக்கும் அதிர்ச்சிகரமான விஷயங்களால் துவண்டு, தங்கள் காதலைத் துறக்கும் முடிவுக்கு வருகிறார்கள்.. கடைசியில் சேர்கிறார்கள்.

சிம்புவின் தந்தையாக ரகுவரன்.. அப்பழுக்கில்லாத performance.. "பறக்கிறதுக்கு ஆசைப்படணும்.. அப்போ தான் இருக்கிறதையாவது காப்பாத்திக்க முடியும்..” என்று அவர் சொல்வது வித்தியாசமான, ரசிக்கத்தக்க லாஜிக்..

சிம்புவின் தம்பியாக டி.ஆரின் அடுத்த படைப்பு குறளரசன்.. கொஞ்சம் குண்டுப் பையனாக வரும் அவரை சிம்பு படத்தில் கன்னா பின்னாவென்று கிண்டலடித்துத் தள்ளுகிறார்.. வீட்டுக் கோபமோ என்னவோ..??

படத்தில் சிம்புவையும் டாமினேட் செய்து நமக்கு ஆறுதல் அளிக்கிறார் விவேக்.. படம் முழுக்க காமெடி சாம்ராஜ்யம் நடத்துகிறார்.. குறிப்பாக ட்ரெய்னிலிருந்து இறங்கி நண்பன் வீட்டுக்குப் போய்ச் சேரும் வரையிலான காட்சியில் வயிறு புண்ணாகிறது.. எதற்காக 2500 ரூபாய்க்கு சரியாக எல்லோரையும் ஏமாற்றுகிறார் என்பது கடைசி வரை தெளிவாக்கப்படவில்லை..

த்ரிஷா.. வந்து போகிறார்..!! பாடல் காட்சிகளில் அவருக்கு சுளுக்கா, தசைப்பிடிப்பா என்று தெரியவில்லை.. சிம்பு கண்ட இடங்களில் கை வைத்துத் தடவி விட்டுக் கொண்டேஏஏஏஏ இருக்கிறார்.. எனக்கென்னமோ South Indian Drew Barrymore ஜோதிகாவின் “கண் நிறைந்த” அழகை ரசித்து விட்டு த்ரிஷா மாதிரி குச்சி குச்சி ராக்கம்மாக்களை ரசிக்க முடியவில்லை..

க்ளைமாக்ஸ் வில்லனாக நாசர்.. ஒன்றும் அதிரடியாக செய்யாமல், கடைசியில் ரகுவரனைப் போல் இவரும் கருத்து கந்தசாமியாகி விடுகிறார்..

ரொமான்ஸ் காட்சிகள் கொஞ்சம் பரவாயில்லை..

சமீப காலமாக நல்ல பாடல்களை அளித்து வந்த வித்யாசாகருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை.. பாடல்கள் எதுவும் மனதில் நிற்பது போல இல்லை.. சண்டைக் காட்சிகளிலும் பிண்ணனி இசை அவ்வளவாக ஈர்க்கவில்லை..

க்ளைமாக்ஸ் காட்சியைப் பார்த்து விட்டு டி.ஆர். உணர்ச்சி மேலிட கண்கலங்கி விட்டதாக எதிலோ படித்தேன்.. எனக்கு சிரிப்புத்தான் வந்தது.. தயாரிப்பாளரை நினைத்து அழுதாரோ என்னமோ..?? இருக்கும்..!!

"க்ளாஸ் பாதி.. மாஸ் பாதி.. ரெண்டும் சேர்ந்து தான் ஆதி..!!", "தம்மும் நான் தான்.. அலையும் நான் தான்.." என்று சம்பந்தமில்லாமல் சில காட்சிகளில் டயலாக் விடுகிறார் சிம்பு..

படத்தில், தம்பி குறளரசனிடம் சிம்பு, "சின்னவன் எப்பவும் சின்னவனாத்தான் இருக்கணும்.. ரொம்ப ஆடக் கூடாது.." என்று சொல்கிறார்.. கண்ணாடி முன்னால் நின்று ஒருமுறை தனக்கே அதைச் சொல்லிக் கொண்டால் தேவலை..!!

Old Commenting System: |

Very Old Commenting System: