Harry Potter and The Goblet of Fire

(குறிப்பு: இந்த வலைப்பதிவில் தமிழ்த் திரைப்படங்களை மட்டுமே எனது பார்வையில் விமர்சனம் செய்து வந்தேன். ஆங்கிலத் திரைப்படங்களையும் இவ்வாறு விமர்சனம் செய்யுமாறு சில நண்பர்கள் கேட்டுக் கொண்டனர். அதன்படி இன்று முதல் நான் அவ்வப்போது காணும் புதிய ஆங்கிலத் திரைப்படங்களையும் விமர்சனம் செய்வேன். நன்றி.)

நடிகர்கள்: Dan Radcliffe, Rupert Grint, Emma Watson, Robbie Coltrane, Ralph Fiennes
இயக்கம்: Mike Newell

ஜே.கே.ரௌலிங் எழுதி வரும் ஹாரி பாட்டர் வரிசை புத்தகங்களும் அவற்றை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களும் உலகெங்கும் பெரும் வரவேற்பை அடைந்து வருவது அனைவரும் அறிந்ததே. இது வரை வெளியான ஆறு புத்தகங்களில் எனக்கு மிகவும் விருப்பமானது Goblet of Fire என்ற நான்காவது புத்தகமே ஆகும். Quidditch உலகக் கோப்பை ஆட்டம், மூன்று பள்ளிகளுக்கிடையேயான TriWizard Tournament, பிரமிப்பூட்டும் மாயாஜாலக் கற்பனைகளின் உச்சம், ரான் ஹெர்மியொனி இடையிலான இணைப்பின் மெலிதான ஆரம்பம், வால்டிமார்ட்டின் மீள் எழுச்சி, அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அளிக்கின்ற அட்டகாசமான கதையும் முடிவும் என்று அந்தப் புத்தகம், ஒரு கச்சிதமான படைப்பு. அதைத் திரைப்படமாக்குவதின் சவால்கள் மிகப் பெரியவை. இயக்குனர் Mike Newell அவற்றில் 80% நிறைவேற்றியிருக்கிறார் என்பது எனது முடிவு. அதுவே மிகப் பெரிய விஷயம் என்பது உண்மை.

மாயாஜாலக் காட்சிகள் மீதான ஆர்வம் பார்வையாளர்களுக்குக் குறைந்து விட்டதோ என்ற ஐயத்தின் அடிப்படையில், அவற்றைக் கணிசமாகக் குறைத்து, கதைக்கும் ஹாரி என்ற சிறுவனின் (பதின்மவயதினன்) வளர்ச்சியையும் திரைப்படத்தின் மையமாக்கியிருக்கிறார்கள். இதனால் முந்தைய திரைப்படங்களிலிருந்து பெரிதும் மாறுபட்டிருக்கிறது இந்தப் படம். Quidditch உலகக் கோப்பைக்கே அவ்வளவாய் இடமில்லை, ஆரம்பத்தைக் காட்டிவிட்டு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விடுகிறார்கள்.

நான்காவது திரைப்படம் என்பதால் ஹாரியும் அவனது நண்பர்களும் பள்ளி துவங்கும் வருட ஆரம்பத்தில் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் எதுவும் இல்லாமல், எல்லோரும் ரான் வீட்டிலிருந்து உலகக் கோப்பைப் போட்டி நடக்கும் மைதானத்துக்குச் செல்வதில் ஆரம்பிக்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசமாய் இருக்கிறது, அடுத்த படங்களில் பழகி விடக் கூடும்.

முதன்முறையாக படம் முழுவதும் ஹாரி மட்டுமே இருக்கும் காட்சிகள் நிறைய. ரான், ஹெர்மியொனி ஆகியோரைத் தேட வேண்டியிருக்கிறது. அப்படி இருக்க, டிராகோ மால்ஃபாய் எல்லாம் கெஸ்ட் அப்பியரன்ஸ் போன்று இருக்கிறது. அவன் இடம்பெறும் ஒரு காட்சியிலும் அவனை ஒரு முயலாக்கி காமெடி செய்து விடுகிறார்கள்.

அறுநூறு பக்கப் புத்தகத்தை மூன்று மணி நேரத்துக்கும் குறைவான திரைப்படமாக ஆக்க வேண்டியிருப்பதால், திரைக்கதை பல சமயங்களில் புத்தகத்தை விட்டு விலகிச் செல்கிறது. புத்தகங்களின் தீவிர ரசிகர்களுக்கு இது மிகுந்த வருத்தத்தை அளிக்கக் கூடும். உதாரணமாக எனக்கு மிகவும் வருத்தத்தை அளித்தது, house elf-கள் எதுவும் இடம்பெறாதது. இரண்டாம் படத்திலேயே இடம்பெற்று மனதைக் கவர்ந்த Dobby என்ற house elf-உம், பார்ட்டி க்ரௌச் (Barty Crouch) வீட்டின் house elf-உம் புத்தகத்தில் நிறைய இடம்பெறும். அவற்றிற்காக உரிமைக் குரல் கொடுத்து ஹெர்மியொனி நடத்தும் SPEW (Society for Protection of Elf Welfare) போன்றவை மிகவும் ரசமான கட்டங்கள். அவை இல்லாமல் கடுப்பாகி விட்டது. திரைப்படத்தை மூன்றரை மணி நேரமாக்கியிருக்கலாம்.

பத்து நிமிடங்களே வந்தாலும், படத்தில் பட்டையைக் கிளப்புவது வால்டிமார்ட்டாகத் தோன்றியிருக்கும் Ralph Fiennes தான். பின்னுகிறார் மனிதர். கச்சிதமான தேர்வு.

Dumbledore, Mad-Eye Moody ஆகிய பாத்திரங்களில் வருபவர்களும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். Snape-க்கு அவ்வளவாய் வேலை இல்லை. அது இன்னொரு சோகம்.

TriWizard Tournament நடைபெறுவதால் திரைப்படத்தில் பிரம்மாண்டத்துக்குக் குறைவில்லை. ஆனால் இறுதிப் போட்டியைச் சொதப்பியிருக்கிறார்கள். டிராகன்கள் இடம்பெறும் முதல் போட்டி மகா விறுவிறுப்பு.

கதையைத் த்ரில்லராகக் கொண்டு போக முயன்றிருக்கிறார்கள். என்ன சிக்கல் என்றால் எழுத்தில் படிக்கும் போது ரௌலிங் அங்கங்கே நழுவ விடும் க்ளூக்களை கண்டுபிடிப்பது மிக சிரமம். இறுதியில் உண்மை புரியும் போது ஒவ்வொன்றாய் இணைத்துப் பார்ப்பதில் உள்ள சுகமே அலாதி. ஆனால் திரைப்படத்தில் எல்லாவற்றையும் காட்சியாகக் காட்டி விடுவதால் அவற்றை சுலபமாக இனங்கண்டு கொள்ள முடிகிறது. எனவே மிகுந்த சுவாரஸ்யம் என்று சொல்ல முடியாது.

Yule Ball எனப்படும் நடன நிகழ்ச்சியை ஒட்டிய காட்சிகள் அனைத்தும் மிக ஹாஸ்யமாக எடுக்கப்பட்டுள்ளன. அந்த வயதுக்கே உரிய குறும்புகளும் வெட்கமும் அந்தக் காட்சிகளின் சுவையான பின்புலமாகின்றன.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கும் போது ரசிகர்களுக்கு நல்ல திருப்திகரமான படமாகவே இருக்கிறது. இன்று பகல் ஒரு மணி காட்சிக்கு அலுவலகத்திற்கு அரை நாள் விடுப்பு எடுத்து நான் சென்றது சொந்தக் காசில். இப்போது இரவு பத்து மணி காட்சிக்கு நான் செல்ல இருப்பது HBO தொலைக்காட்சி நிறுவனத்தின் உபயத்தில் கிடைத்த இலவச டிக்கெட்டில். என்னத்தைச் சொல்ல :-))

உலகக் கோப்பை நடைபெறும் மைதானத்தில் உள்ள ஆறடிக்குப் பத்தடி டெண்ட்டுக்குள்ளே நுழையும் ஹாரி, மிகப் பரந்து விரிந்திருக்கும் அதன் உட்புறத்தை நோக்கி பிரமித்து, "I love magic" என்கிறான். படம் பார்க்கும் எனக்கும் அதே கருத்து தான்.

I love magic. I love Harry Potter. I love Rowling.

Bring it on, Ma'am.
Old Commenting System: |

Very Old Commenting System:

சிவகாசி

நடிகர்கள்: விஜய், அஸின், பிரகாஷ்ராஜ், கீதா
இசை: ஸ்ரீகாந்த் தேவா
இயக்கம்: பேரரசு

மாஸ் ஹீரோ என்ற ராஜபாட்டையில் விஜய் விறுவிறுப்பாக முன்னேறிக் கொண்டிருக்கும் பயணத்தில் இன்னுமொரு முக்கிய மசாலா கொத்து பரோட்டா மைல்கல் தான் சிவகாசி.

ரசிகர்கள், தாய்க்குலங்கள் ஆகிய இரு பெரும் டார்கெட் ஆடியன்ஸைக் குறி வைத்திருக்கிறார்கள். முதல் பாதி ரசிகர்களுக்கு. சிவகாசிப் பட்டாசு வெடி வெடி என்று அதிரடியாய் வெடிக்கிறது. இரண்டாம் பாதி தாய்க்குலங்களுக்கு. உருக்கோ உருக்கு என்று சென்டிமென்ட்டில் உருக்கித் தள்ளுகிறார்கள். இரண்டையும் நகைச்சுவை கலந்து பறிமாறியிருப்பதே பார்வையாளர்களுக்கு ஓரளவு நிம்மதியைத் தருகிறது.

தி.நகர் ரங்கனாதன் தெருவில் வெல்டிங் ஷாப் வைத்திருக்கும் 'அநாதை' சிவகாசி. (அந்தத் தெருவில் வெல்டிங் ஷாப்புக்கு என்ன அவசியம் என்று புரியவில்லை. கஸ்டமர்கள் வருவதற்கும் போவதற்கும் ரொம்பச் சிரமமாயிருக்குமே..!!) ஆதிகேசவன் ஸ்டைலில் மார்பில் தங்க நகைகள் புரள வலம் வரும் பல்லாக்கு பாண்டி என்ற ரவுடியை அடக்கும் விதமாக சண்டையில் பொறி கிளப்பி அறிமுகமாகிறார் விஜய். கடையின் ஷட்டரை வெல்டிங் செய்து உடைத்து அவர் வெளியே வரும் முதல் காட்சியிலேயே ரசிகர்களுக்கு அல்வா சாப்பிட்ட திருப்தி. அட்டகாசம்.

பணக்காரப் பெண் அஸினுக்கும் அவருக்கும் சில உரசல்கள், சில சவால்கள். அந்த சில காட்சிகள் முடிந்து பார்த்தால் இருவருக்கும் லவ்ஸ். நடுவில் 'பொண்ணுன்னா இப்படித்தான் இருக்கணும்' போன்ற கொள்கை விளக்க வசனங்கள், 'ஆயிரம் இருந்தாலும் அவன் ஆம்பளை, போலீஸா இருந்தாலும் நீங்க பொம்பளை, அவனை நீங்க அடிச்சிருக்கக் கூடாது' போன்ற கேனத்தனமான பெண்ணிய எதிர்ப்பு வசனங்கள். அதையெல்லாம் தாண்டி இடைவேளைக்கு வந்து சேரும் போது தெரிகிறது, விஜய் ஒரு அநாதை அல்ல என்ற திடுக்கிடும் திருப்பம்.

சின்ன வயதில் அண்ணன் செய்த தவறுக்கு பழி ஏற்று வீட்டை விட்டு துரத்தப்பட்டவர் விஜய். அப்பா, அம்மா, தங்கை ஆகியோரின் நினைவுகளை மறக்க அவர் அணிந்த வேடம் 'அநாதை'. குடும்பத்தோடு வந்து பெண் கேட்டால் மட்டுமே திருமணத்திற்கு சம்மதிப்பேன் என்று அஸின் சொல்லிவிட இழந்த குடும்பத்தை மீட்க சொந்த ஊரான நாட்டரசன் கோட்டைக்குப் புறப்படுகிறார் விஜய். அங்கே தானய்யா சென்டிமென்ட்டும், நகைச்சுவையும் வந்து சேர்ந்து கொள்கிறது. விறுவிறுப்பாக பட்டையைக் கிளப்பி க்ளைமாக்ஸ் வரை அலுக்காமல் கொண்டு போய் முடிக்கிறார் பேரரசு.

சவாலான கேரக்டர், கஷ்டமான காட்சிகள் இப்படியெல்லாம் தன்னைத் தானே வருத்திக் கொள்ளாமல், தனக்கென ஒரு எளிமையான பாதையை வகுத்துக் கொண்டுள்ளார் விஜய். அதை மிகவும் திருப்திகரமாகச் செய்து முடிக்கும் சூரத்தனம் அவருக்கு அளவில்லாமல் இருக்கிறது. காமெடி, நடனம், சண்டைகள், சென்ட்டிமென்ட், காதல் என்று சகலத்திலும் புகுந்து புறப்படுகிறார். தமிழ் முரசு மாதிரி நச்சென்று செய்து முடிக்கிறார். எததனை நாளுக்கு இப்படியே ஓட்ட முடியும் என்ற கேள்வியை மறந்து விட்டுப் பார்த்தால் அவருடைய பங்களிப்பு மிகப் பிரமாதம்.

அஸினுக்கு ஒரு வழக்கமான கதாநாயகி வேலை. அளவோடு செய்திருக்கிறார்.

கிராமத்து அண்ணனாக, கேப்மாறித் தனங்களின் ஒட்டுமொத்த குத்தகைதாரராக வரும் பிரகாஷ்ராஜ், ஊரில் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். தாயையும் தங்கையையும் கவனிக்காமல் அட்டூழியம் பண்ணிக் கொன்டிருக்கிறார். நகைச்சுவை கலந்த வில்லத்தனத்தை அம்சமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

அம்மாவையும் தங்கையையும் பழைய நிலைமைக்குக் கொண்டு வந்த பிறகே தான் யார் என்ற உண்மையைச் சொல்லப் போவதாக விஜய் முதலிலேயே தேவையில்லாமல் முடிவு செய்து விடுவதால் சில சுவாரஸ்யமான நிகழ்வுகள்.

குறிப்பாக பிரகாஷ்ராஜின் எடுபிடிகளாக வருகின்ற இரண்டு பேர் காமெடியில் பின்னிப் பெடலெடுக்கிறார்கள். விஜய் ஒரு கடிதத்தை வைத்து பேரம் பேசும் போது, "ஒண்ணு", "ரெண்டு", "நாலு" என்று பேசிக் கொன்டிருக்கும் போது எடுபிடி உள்ளே நுழைந்து, "அண்ணே, என்ன இது சில்லறைத்தனமா? பத்துன்னு ரவுண்டாப் பேசி முடிங்க" என்று சொல்வதும், பிரகாஷ்ராஜ் அவரிடம், "சரி, பத்து கொண்டு வா" என்று அவரை அனுப்பி விட்டு, "ஆனாலும் இந்தக் கடுதாசிக்கு பத்தாயிரம் ரொம்ப அதிகம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர் ஒரு பெட்டியுடன் வருவதும், "எதுக்கு பெட்டி?" என்று விசாரிக்க, "பெறவு? பத்து லட்சத்தைப் பெட்டியில போட்டுத் தானே கொண்டு வர முடியும்" என்று சொல்வதும், "பத்து லட்சமா? நான் பத்தாயிரம் தானேடா சொன்னேன்" என்று அவர் மிரட்சி கொள்வதும், எடுபிடி அதற்குப் பதிலாக, "அந்த எழவைப் பத்தாயிரம்னு சொல்லித் தொலைக்க வேண்டியது தானே? ஒண்ணு ரென்டு மூணுன்னு ஒண்ணாங்கிளாஸ் மாதிரிச் சொல்லிக்கிட்டிருந்தா எனக்கு என்ன வெளங்கும்?" என்று பட்டாசு கொளுத்திப் போடுவதும் மிக சுவையான நகைச்சுவை. தியேட்டர் அதிர்கிறது.

ஸ்ரீகாந்த் தேவா, தனது பிண்ணனி இசை மூலம் சண்டைக் காட்சிகளுக்கு நெருப்பு மூட்டியிருக்கிறார். அஸினிடம் தனக்கு ஏற்பட்டிருக்கும் காதலைப் பற்றிச் சொல்லும் போது விஜய், "இது உங்க காதல், எங்க காதல் இல்லை, ங்கொக்காமக்கா காதல்" என்று சொல்வார். அதைப் போல் பாடல்களில் ஸ்ரீகாந்த் தேவா போட்டிருக்கும் குத்து, "உங்க குத்து, எங்க குத்து இல்லை, ங்கொக்காமக்கா குத்து." அப்படி ஒரு கும்மாங்குத்து போட்டு குமுறியிருக்கிறார். "தீபாவளி தீபாவளி" பாட்டில் அலுமினிய டம்ளர் முதற்கொண்டு டிரம்ஸ் வரை சகலத்தையும் போட்டு அடி பின்னியெடுத்திருக்கிறார். "வாடா வாடா", "கோடம்பாக்கம்" ஆகிய பாடல்களும் கேட்பவர்களை முறுக்கேற வைக்கும் வண்ணம் இருக்கின்றன.

அம்மா மீதான அன்பும், தங்கை மீதான பாசமும் வெளிப்படுத்தும் காட்சிகளில் விஜய் பொருத்தமான முக பாவங்களோடு சிறப்பாக செய்திருக்கிறார். தங்கையின் மகளாக ஒரு சிறுமி மனதைக் கவர்கிறாள்.

இயக்குனர்களில் இரண்டு வகை உண்டு. ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற இயக்குனர்கள் ஒரு வகை. மாஸ் ஹீரோ என்ற ஆளுமைக்கு ஆசைப்படும் நாயகர்களுக்கு நம்பிக்கை ஊட்டுகிற இயக்குனர்கள் இன்னொரு வக. இயக்குனர் பேரரசு, தெளிவான இரண்டாம் வகைக்காரர். கே.எஸ்.ரவிக்குமாரின் சென்டிமென்ட் மசாலா பிராண்டை கையகப்படுத்திக் கொண்டு கொஞ்சம் நகைச்சுவையைத் தூக்கலாகத் தூவிவிருந்து படைப்பதில் அவர் சமர்த்தர்.

அஜீத் ரசிகர்கள், நம்பிக்கையோடு 'திருப்பதி' திரைக் காவியத்தை எதிர்பார்க்கலாம்.
Old Commenting System: |

Very Old Commenting System: