கஜினி

நடிகர்கள்: சூர்யா, அஸின், நயன் தாரா, ரியாஸ் கான்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: ஏ.ஆர்.முருகதாஸ்

'சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்' என்று சொல்வார்கள். ஹாலிவுட் திரைப்படமான 'தி மெமெண்டோ'-வின் திரைக்கதையை சுட்டு சுவராக்கி, அதன் மேல் தனது சித்திரத்தை வரைந்திருக்கிறார் முருகதாஸ். ஆங்கிலப் படம் கொஞ்சம் அறிவுப் பூர்வமாக அணுக வேண்டிய அவசியமுடையது. இதில் அந்தளவுக்குக் குழப்பிக் கொள்ளாமல் உணர்வு பூர்வமாக அணுக முயன்றிருக்கிறார்.

'குறைந்த கால நினைவிழப்பு' (Short term Memory Loss) என்ற தன்மையை உடையவராக அறிமுகமாகிறார் சூர்யா. எடுத்த எடுப்பிலேயே கொலை செய்கிறார். மருத்துவக் கலூரி மாணவியான நயன் தாரா, அவரைப் பற்றி ப்ராஜெக்ட் செய்ய ஆசைப்படுகிறார். ஆனால், 'வேண்டாம்' என கல்லூரிப் பேராசிரியரால் அறிவுறுத்தப்படுகிறார். என்றாலும் சூர்யாவின் பின்னணி குறித்து ஆராய முற்படுகிறார். கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரி ரியாஸ் கான் இன்னொரு பக்கம் சூர்ய்வாவின் பின்னணியை ஆராய்கிறார். இவர்களின் மூலம் சூர்யாவின் முன் கதை நமக்குக் காட்டப்படுகிறது. சூர்யா-அஸின் காதலும், அவரது நினைவிழப்புக்கான காரணமும் தெரிய வருகிறது. நடுவில் சூர்யா கொல்ல நினைக்கும் வில்லன் கோஷ்டியினர் இன்னொரு பக்கம் அவரைத் தேடியலைகின்றனர். முடிச்சுகள் அவிழ்ந்து சூர்யா தன் நோக்கத்தை நிறைவேற்றினாரா என்பது மீதி.

என்னமாய் நடிக்கிறார் சூர்யா? அடே.....ங்கப்பா..!!! நினைவிழப்பு உடையவராக வருகையில் ஒரு அறையைச் சுற்று முற்றும் பார்க்கும் போது பார்வை தொடர்ச்சியாக சுழலாமல், நிறுத்தி நிறுத்தி அவர் இங்குமங்கும் பார்ப்பதே நமக்கு 'ஜிவ்'வென்று இருக்கிறது. நடையும் அப்படியே ஒரு பரபரப்பு மிகுந்ததாய் 'சும்மா நச்சுனு இருக்கு'. சஞ்சய் ராமசாமியாக, ஒரு இளம் கோடீஸ்வரராகப் பட்டையைக் கிளப்புகிறார். என்ன அசத்தலான கம்பீரம்? பெங்களூர் திரையரங்குகளில் பெண்கள் பக்கமிருந்து செம விசில் சத்தம். 'சுட்டும் விழிச்சுடரே' பாடலில் தலையை அசைத்துக் கொண்டே அவர் ஆடும் அழகில் மனதைக் கொள்ளை கொள்கிறார். திரையரங்கில் இருக்கிற புகைப்பட/ஒளிப்பதிவு வசதி உள்ள செல்பேசிகள் அனைத்தும் திரையை முற்றுகையிட்டு அவரைச் சிறைப்படுத்திக் கொள்கின்றன. அத்தனை இனிமை!! (So Sweet!!)

தனக்கும் சூர்யாவுக்கும் காதல் என்று கிலோமீட்டர் கிலோமீட்டராய் ரீல் சுற்றும் அஸின் மேல் கோபம் கொண்டு, அவரைத் திட்டுவதற்காக வந்து, ஆனால் அவரது அழகிலும் துடுக்கான பேச்சிலும் மயங்கி கோபம் கொள்ள மறந்து, ஒரு மாதிரி வழிந்து விட்டுப் போகிறாரே ஒரு காட்சியில், அடடா, திரையில் என்னையே பார்த்த மாதிரி இருந்தது. ;-)))

கண்ணெதிரில் அஸினை வில்லன் அடித்துக் கொல்லும் போது, அவரைக் காப்பாற்ற முடியாத நிலையை நினைத்து ஏங்கி அழுகிறாரே, வாவ்! வெல்டன் சூர்யா.

சூர்யாவும் அஸினும் பார்த்துப் பழகி காதல் வயப்படும் முன் கதைக் காட்சிகள் அட்டகாசம். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு அழகான காதலைத் திரையில் கண்டு ரசித்த திருப்தி எனக்கு. மிக மென்மையாகவும், மிக கலகலப்பாகவும் நகர்கின்றன இந்தக் காட்சிகள். இதனாலேயே இதை ஒரேடியாகக் காட்டாமல் பிரித்துப் பிரித்துத் தொகுத்திருப்பது படத்திற்கு ஒரு சுவாரஸ்யத்தை ஏற்படுத்துகிறது.

அஸினுக்கு அருமையான, துடுக்குத் தனம் நிறைந்த, அழகான பாத்திரம். நிறைவாகச் செய்திருக்கிறார். முக சேஷ்டைகளிலும் பின்னியெடுத்திருக்கிறார். உயர உயாப் பறந்தாலும் அந்த விஷயத்தில் அஸின் 'ஜோ' ஆக முடியாது என்றாலும், நன்றாகவே ரசிக்கும் படியாகச் செய்திருக்கிறார்.

நயன் தாராவை நன்றாக உபயோகப் படுத்தியிருக்கிறார்கள். அவ்வளவு தான் நாகரிகமாகச் சொல்ல முடியும். மருத்துவக் கல்லூரி மாணவி என்று சொல்கிறார்கள், ஆனால் ஒரு கலை விழாவில் அவர் ஆடுவது டூ, த்ரீ, ஃபோர், ஃபைவ், சிக்ஸ், செவன், எய்ட், நைன், டென் மச்..!!

முன் கதையை அழகாகச் சொன்ன அளவுக்கு நினைவிழப்பு தொடர்பான காட்சிகளையோ அல்லது சூர்யாவின் பழி வாங்கும் படலத்தையோ இறுக்கமாகச் சொல்லவில்லை. வில்லனை இரட்டைப் பிறவியாக்கி கொஞ்சம் புதுமை என்ற பெயரில் முயற்சி செய்திருந்தாலும் வெட்டியாக ஜல்லியடிப்பது மாதிரி ஒரு பிரமை தான் வருகிறது. மோசமில்லை, அதே சமயம் அற்புதமும் இல்லை.

சின்னச் சின்ன மின்னல்களாய் ஒரு சில காட்சிகள் 'அட' சொல்ல வைக்கின்றன. குறிப்பாக வில்லனின் தொழிற்சாலைக்குள் நயன் தாரா இருந்து கொண்டு சூர்யாவிடம் ஃபோனில் பேசுவது போன்று.

ஆனால் இந்தப் படத்திலும் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் கேணயர்களாக இருக்கிறார்கள். "இந்த நம்பர்ல பத்து இலக்கங்கள் இருக்கு. அதனால் இது ஒரு மொபைல் நம்பராத்தான் இருக்கணும்" போன்ற கண்டுபிடிப்புகளை அவர்கள் செய்யும் போது திரையரங்கில் சிரிப்பு மழை. ரியாஸ் கான் ஏதோ செய்யப் போகிறார் என்று எதிர்பார்த்தால் பரிதாபமாக செத்துப் போகிறார். அதே போல் வில்லன், சூர்யாவின் பழைய நினைவுகளுக்கான சாட்சிகளாக வைத்திருக்கும் எல்லாப் பொருட்களையும் அழித்து விடுவதால் ஏதாவது புதுமையாக நடக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்து போகிறோம்.

'சுட்டும் விழிச் சுடரே', 'ஒரு மாலை இளவெயில் நேரம்' ஆகிய இரண்டு பாடல்களும் கேட்கவும் இனிமையாய், பார்வைக்கும் அழகாய் இருக்கின்றன. இரண்டு நாயகிகளும் தனியே ஆடிப் பாடும் இரண்டு பாடல்களும் மகா தண்டம். பின்னணி இசையில் ஒன்றும் பிரமாதமாய் இல்லை.

இன்னும் நன்றாக எடுத்திருக்கலாமே என்ற ஆயாசத்தைக் கொஞ்சம் தருகிறது படம். இருந்தாலும் சூர்யாவின் நடிப்புகாகவும், அழகான காதலுக்காகவும், நல்ல முயற்சிக்காகவும் திரையரங்கில் பார்த்துப் பாராட்ட வேண்டிய படம்.

சொந்தச் சுவர் இல்லையென்றாலும் சித்திரத்தை அழகாகத் தான் வரைந்திருக்கிறார் முருகதாஸ். பாராட்டுக்கள்.
Old Commenting System: |

Very Old Commenting System:

தொட்டி ஜெயா

நடிகர்கள்: சிம்பு, கோபிகா
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
இயக்கம்: V.Z. துரை

அடியாள் வேலை செய்யும் ஒருவன் வாழ்வில் குறுக்கிடுகிறாள் தேவதை மாதிரி ஒருத்தி. அவனது கட்டாந்தரை மனசுக்குள் பூப்பூக்க வைக்கிறாள் அவள். அவர்களின் காதலுக்கும் வரும் குறுக்கீடுகளும் அவர்கள் இறுதியில் இணைகிற கதையும் தான் படம். (அதெப்படி இணையாமல் போவார்கள்? தமிழ் சினிமாவில்?!)

பள்ளியில் தமிழ்ப் பாடத்தில் செய்யுள் பகுதியில் மனப்பாடப் பகுதி இருக்கும். பல சமயம் 'என்னடா ரோதனை இது' என்ற நினைப்புடன் தான் அவற்றைப் பலரும் மனப்பாடம் செய்ய முக்கி முனகுவார்கள். ஆனாலும், அவற்றில் ஒன்றிரண்டு, கருத்தின் வளத்தோடும் அழகின் நயத்தோடும் இருந்து அசத்தி விடும். அதைப் போலத் தான் தொட்டி ஜெயாவும். சுமாரான ஒரு படத்தில் அங்கங்கே கவிதை மாதிரி காட்சிகள்.

நாயகன், அமரன், ரன், போன்ற தமிழின் வெற்றிகரமான gangster moviesகளின் ஞாபகம் அவ்வப்போது வந்து தொலைத்தாலும் படத்தில் தென்படும் ஒரு freshness-க்காக மன்னிக்கலாம்.

முக்கியமாய் சிம்பு வாயை மூடிக் கொண்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்த முயன்றிருக்கிறார் என்பது மிக வரவேற்க வேண்டிய அம்சம். நடிப்பில் அப்படியொன்றும் பிய்ச்சு உதறவில்லையென்றாலும் பாராட்டத்தக்க கட்டுப்படுத்திய நடிப்பை அவ்வப்போது வெளிப்படுத்துகிறார். சண்டைக் காட்சிகளில் நல்ல உக்கிரம். தாடி வேறு ஒரு சீரியஸ் உணர்வைப் படம் முழுக்கத் தொடர்ந்து தந்து கொண்டே இருப்பதால் திருப்தியாகவே இருக்கிறது. எப்போதாவது குறிஞ்சி பூத்த மாதிரி அவர் சிரிக்கும் போது நமக்குப் பிடிக்கிறது.

ஒரு மத்திய வர்க்கக் குடும்பப் பெண்ணாக படம் முழுக்க சுடிதார் அணிந்து கொண்டு வந்தால் கோபிகா நிஜமாகவே தேவதை மாதிரி தான் இருக்கிறார். (அல்லது ஒருவேளை 'நெடில்+குறில்+கா' என்று பெயர் வைத்திருக்கும் நடிகைகள் என்றால் எனக்கு ரொம்பப் பிடிக்குமோ என்னவோ!!) கல்கத்தாவில் ரயிலைத் தவற விட்டு விட்டு, சிம்புவுடன் அவர் கன்யாகுமரிக்கு பயணப்படும் காட்சிகளில் அருமையாக செய்திருக்கிறார். இரண்டாம் பாதியில் அவருக்கு வேலை ஒன்றும் இல்லை. முதல் பாதியில் கிடைத்த வாய்ப்புகளை சிறப்பாகப் பயன்படுத்தி ஜொலித்திருக்கிறார்.

இடை வேளை வரையிலான காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன. தியேட்டரில் பலரும் அடுத்து இப்படித் தான் நடக்கப் போகிறது என்று ஊகித்து அதைக் கத்த, சிம்புவும் கோபிகாவும் அதையே செய்ய நல்ல காமெடி. ஆனாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது.
ஆனால், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு பெயர் இல்லாத சாபம் இருக்கிறது போலும். "Well begun is half done; Half done is enough done!!" என்று இயக்குனர்கள் பலரும் நினைத்து விடுவது தான் அந்த சாபக் கேடு.

இரண்டாம் பாதியில் எந்தப் பக்கம் போவது என்று சிம்புவும் கோபிகாவும் தவிப்பது போலவே திரைக்கதையும் தவித்து, தடுமாறி நொண்டுகிறது. அமெரிக்காவின் வேலைகளை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்வது போல், சிம்புவையும் கோபிகாவையும் 'போட்டுத் தள்ளும்' வேலையை ஏரியா ஏரியாவாய் இருக்கிற ரௌடிகளைக் கூப்பிட்டு அவுட்சோர்ஸ் செய்கிறார் வில்லன். மதுரையிலிருந்து வரும் கோஷ்டியிடம் நேராய் சென்று அவர்கள் மனதை மாற்றும் வகையில் பேசி அவர்களை சைடு மாற்றி அவர்களுடனே சிம்பு ஒரு குத்தாட்டம் போடுவது காமெடி என்றாலும் கொஞ்சம் ஓவர்.

சென்னையின் மிகப்பெரிய தாதாவான வில்லனின் அடியாட்கள் எல்லோரும் இந்த 2005-ம் ஆண்டில் போய் கத்தி, கோடாலி போன்ற அரதப் பழசான ஆயுதங்களை வைத்துக் கொண்டு நாயகனைத் தேடி வந்து அடி வாங்கி ஓடிப் போகும் கொடுமையை எங்கே போய் அழுவது என்று எனக்குப் புரியவில்லை.

ஹாரிஸ் ஜெயராஜின் பிண்ணனி இசை படத்திற்கு ஒரு பெரிய பலம். குறிப்பாக சண்டைக் காட்சிகளின் பிண்ணனியாக வரும் மிரட்டலான தீம் ம்யூசிக், சிம்புவுக்கும் கோபிகாவுக்கும் காதல் மலரும் தருணங்களில் மனதை வருடிக் கொடுக்கும் மெலடி என இரண்டு விதமாகவும் பின்னியிருக்கிறார். பாடல்களில் உறுத்தாத இசையும் அருமையாகவே இருக்கிறது.

காமிரா ஆங்கிள்களில் மிகவும் மெனக்கெட்டு வித்தியாசம் காட்டியிருக்கிறார் ஆர்.டி.ராஜசேகர். மிக நம்பிக்கையூட்டும் விதமான ஒளிப்பதிவை அளித்திருக்கிறார். குறிப்பாக ஒரு காட்சியில் சிம்பு-கோபிகாவைத் தேடி வில்லன் கோஷ்டியினர் வருகிறார்கள். மாடிப் படிகளில் இறங்கி அவர்களை எதிர்கொள்ள வருகிறார்கள் சிம்புவும் கோபிகாவும். அப்போது அவர்களின் நிழல் முன்னே வர வர வில்லன் கோஷ்டியினர் பின் வாங்குவதை ஒரு டாப் ஆங்கிளில் படம்பிடித்திருப்பது மிக அருமை.

இயக்குனர் துரையின் உழைப்பு முதல் பாதியில் தெரிகிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதை தன்னைத் தானே எழுதிக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டார் போலிருக்கிறது. இருந்தாலும் ஒரு பாராட்டத்தக்க படமாகவே இருக்கிறது என்பது எனது அபிப்ராயம்.
பெருத்த ஏமாற்றத்துக்கு வழியில்லாத ஓரளவு நல்ல படம்.
Old Commenting System: |

Very Old Commenting System: