மாயாவி

நடிகர்கள்: சூர்யா, ஜோதிகா, சத்யன், ஷண்முகம், சங்கிலி முருகன்
இசை: தேவிஷ்ரீ ப்ரசாத்
இயக்கம்: சிங்கம்புலி

பிதாமகன் படத்தில் ஒரு காட்சிக் கோர்வை வரும். சூர்யா தனது ஏரியா மக்களை சந்தோஷப்படுத்தும் பொருட்டு நடிகை சிம்ரனைக் கடத்தி வந்து அவர்கள் மத்தியில் நடனமாட வைப்பார். ஆர்வக் கோளாறு காரணமாக மாயாவி படத்தின் இயக்குனர் சிங்கம்புலி, அந்த கான்செப்டை எடுத்துக் கொண்டு, இரண்டரை மணி நேரத் திரைப்படமாக்க முயன்றுள்ளார். சுமாரான வெற்றியை மட்டுமே பெறுகிறார்.

மாமல்லபுரத்தில் டூரிஸ்ட் கைடாகக் காலம் தள்ளி வருபவர் 'அபேஸ்' பாலையாவான சூர்யா. அவ்வப்போது டூரிஸ்டுகளின் நகைகளை அபேஸ் செய்பவர். "வெள்ளைக்காரனுங்க நம்ம நாட்டை ஆண்ட போது கோஹினூர் வைரம் மொதக்கொண்டு எல்லாத்தையும் சுட்டுக்கிட்டு போயிட்டானுங்க.. அதையெல்லாம் இந்த பாலையா தான் இப்படி ரெக்கவர் பண்றான்" என்பது அவரது விளக்கம். ஆனால் அந்தப் பணத்தையெல்லாம் சேர்த்து வைத்து மாளிகை கட்டுகிறாரா என்றால் அதுவுமில்லை. அன்றைக்கு எந்த நடிகர் அல்லது நடிகையைப் பிடித்திருக்கிறதோ அவரது படத்திற்கு தனது நண்பர்களை அழைத்துச் சென்று ஸ்பான்ஸர் செய்து தோரணம் கட்டி, 'அமைதியாக சென்று ஆர்ப்பாட்டமாக படத்தைப் பார்க்குமாறு' கேட்டுக் கொள்கிறார். உள்ளே நுழைந்து ஆட்டம், பாட்டம், விஸில் என்று ஒரே அமர்க்களம். "எதை எடுத்துக்கிட்டு வந்தோம்? எதை எடுத்துக்கிட்டு போகப் போறோம்?" என்பது அவரது லாஜிக். இப்படியாகப் போகிறது அவரது வாழ்க்கை. மாமல்லபுரத்தில் ஒரு ஆசாரியாக வாழ்ந்து வரும் சங்கிலி முருகன், சூர்யாவையும் அவரது நண்பராக வரும் சத்யனையும் ஆதரித்து வருகிறார்.

டூரிஸ்ட் சீஸன் இல்லாத நேரத்தில் கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு விடுகிறது. வீடு புகுந்து திருடுகிற முடிவை எடுக்கிறார்கள் சூர்யாவும் சத்யனும். "ஆம்லெட் வேணும்னா முட்டையை உடைச்சுத் தான் ஆகணும்" என்பது இதன் பின்னணியில் உள்ள தத்துவம்.

நீலாங்கரையில் ஒரு பெரிய பங்களாவில் திருட நுழைகிறார்கள். அது திரைப்பட நடிகை ஜோதிகாவின் வீடாக இருக்கவே மனம் மாறி எடுத்த பொருட்களையெல்லாம் வைத்து விட்டுக் கிளம்பி விடுகிறார்கள். என்றாலும் வெளியேறும் நேரத்தில் போலீஸில் மாட்டிக் கொள்கிறார்கள். ஜோதிகாவின் மேனேஜர் அவரது விளம்பரத்துக்காக "வேறு மாதிரி" புகார் கொடுத்துவிட, சூர்யா மூன்று மாதம் ஜெயிலில் கழித்துவிட்டு வருகிறார். கடுப்பில் ஒரு ஷூட்டிங்கில் இருக்கும் ஜோதிகாவைக் கடத்தி விடுகிறார்.

இரண்டாம் பாதியில் சும்மா விளையாட்டுக்காகக் கடத்திய சூர்யா மீது கடத்தப்பட்ட ஜோதிகாவுக்கு ஸ்டாக்ஹோம் சிண்ட்ரோமெல்லாம் ஏற்பட்டு, இடையில் மேனேஜரின் சுயரூபம் வெளிப்பட்டு, ஒரு வழியாக முடிக்கிறார்கள். நம்மையெல்லாம் ஒரு வழி பண்ணிவிட்டு முடிக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுத்த படத்தில் திருஷ்டிக்காக வைத்தது போல் மிக லாஜிக்காய் ஒரு முடிவு. நெளிய வைக்கிறது.

படத்தில் நமது கவனத்தைப் பெரிதும் கவர்வது வசனங்களும் இசையும். டைட்டில் கார்டில் 'வசனம்: விஜி' என்று போடப்பட்டிருந்தது. மிகப் பிரமாதமான நகைச்சுவை உணர்வோடு எழுதப்பட்டிருக்கின்றன வசனங்கள். திரைத் துறையை நையாண்டி செய்வதற்குத் தோதாக திரைக்கதையும் நன்றாக உதவுகிறது. ஜோதிகாவின் மேனேஜர் அவரிடம், "மேடம்! ஷூட்டிங் ஸ்பாட்ல விஜயகாந்த சார் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கிறார். சீக்கிரம் கிளம்புங்க. நாளைப்பின்ன ஏதாவது பஞ்சாயத்துன்னா அவர் கிட்ட தான் போக வேண்டியிருக்கும்" என்று சொல்வது ஒரு சாம்பிள் மட்டுமே. இப்படி நகைச்சுவை இழையோடும் மிக யதார்த்தமான வசனங்களே பெரும்பாலும்.

பாடல்கள் அனைத்துமே மிக அருமையாக இருக்கின்றன. கேட்க, பார்க்க இரண்டுமே. பாடல்களைப் படமாக்கியிருக்கும் விதங்கள் எல்லாமே தூள். குறிப்பாக சூர்யா-ஜோதிகாவின் இடையிலான ஒரே டூயட் பாடல் 'காத்தாடி போல ஏண்டி என்னை சுத்துறே? சூ மந்திரகாளி போட்டு சுத்த வைக்கிற' என்ற பாடலை மிக நன்றாகப் படமாக்கியிருக்கிறார்கள். பின்னணியில் வழக்கமாகப் பல பேர் கூட்டமாக ஆடாமல், சூர்யா-ஜோதிகா போலவே உடையணிந்த இன்னுமிரண்டு ஜோடிகள் மட்டுமே இருப்பது கண்ணுக்கு மிக வித்தியாசமாக இருக்கிறது. 'தேவலோக ராணி' பாடலில் தேவதை மாதிரி இருக்கிறார் ஜோதிகா.

சூர்யா, ஜோதிகா இருவருக்குமே நடிப்பதற்கு ஸ்கோப் இல்லாத கதாபாத்திரங்கள். கெட்டப்பில் புதுமை காட்டிய சூர்யாவுக்கு வேறு ஒன்றும் பெரிதாக வேலை இல்லை. குஷி, தெனாலி, போன்ற படங்களில் ஜோதிகா ஆடியதைப் போலவே சூர்யா ஆடிக்காட்டுவது பிரமிப்பாய் இருக்கிறது. அது சரி, என் அளவுக்கு இல்லாவிட்டாலும் அவரும் ஜோவுக்கு பெரிய ரசிகர் இல்லையா? இதைக் கூட செய்யாவிட்டால் எப்படி? ;-))

கடத்தப்பட்ட ஜோதிகா ஒவ்வொரு காரணத்துக்காக அழுவது சுவாரஸ்யம் கலந்த அழகு. (நமக்கு அவங்க எது செஞ்சாலும் அழகாத்தான் இருக்கும்!!) சத்யன், ஜோதிகாவிடம் தான் சிம்ரன் ரசிகர் மன்றத் தலைவர் என்று சொல்லி அவரைக் கலாய்த்து, "நீங்க ரொம்ப ஓவர் ஆக்டிங் செய்றதா வெளிய பேசிக்கிறாங்க" என்று சொல்லும் போது ஜோ அழுதபடியே சூர்யாவிடம் புகார் செய்கிறார். சூர்யாவோ, "அது அப்படி இல்லைங்க, நீங்க எப்பவுமே வாங்கிற காசுக்கு மேல அதிகமாவே நடிப்பீங்க இல்லையா, அதைப் புரிஞ்சுக்காம அப்படி தப்பாப் பேசறாங்க" என்று சொல்ல ஒரே அமர்க்களம்.

தியேட்டருக்குள் நுழையும் முன்பாக ஜோதிகா சொந்தக் குரலில் பேசி நடித்திருப்பதாக அறிந்த போது என் மனதில் ஏற்பட்டது உற்சாகமா பயமா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியொன்றும் மோசமாக இல்லை. தொலைக்காட்சியில் கேட்கும் சில நாராசங்களுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை. நீங்க தொடர்ந்து பட்டையைக் கிளப்புங்க தலைவி..!!

முதல் பாதி காமெடி கலக்கல். இரண்டாம் பாதி செண்டிமெண்ட் சொதப்பல். இருந்தாலும் படம் எனக்குப் பிடித்தே இருந்தது.

முக்கால்வாசி நேரம் சிரிக்க வைக்க முயற்சித்து அதில் கணிசமாக வெற்றியடையும் படம், கால்வாசி நேரம் கண்கலங்க வைக்க முயற்சித்து தோற்றுப் போகிறது. இது வெற்றியா தோல்வியா என்று தெரியவில்லை.
Old Commenting System: |

Very Old Commenting System: