ஜி

நடிகர்கள்: அஜித், த்ரிஷா, விஜயகுமார், மணிவண்ணன், சரண்ராஜ், வெங்கட் பிரபு
இசை: வித்யாசாகர்
இயக்கம்: லிங்குசாமி

(விமர்சனம் இருக்கட்டும். அதுக்கு முன்னால ஒரு கேள்வி. தமிழ்ப்படத்துக்கு ஆங்கிலத்தில மட்டும் தான் பேர் வைக்கக் கூடாதா? இந்தியில வைக்கலாமா? அது என்ன லாஜிக்?)

தமிழ் சினிமாவின் டார்ச்சர்களுக்கு முடிவே இல்லை போலிருக்கிறது. ஒரு பக்கம் விஜய் என்னடாவென்றால் புதுமையாகக் கதை பண்ணுகிறேன் என்று "தங்கையின் குழந்தை பிறப்பதற்கு முன்னால் சிட்டியை அமைதிப் பூங்காவாக்குகிறேன்" என்று தங்கையின் வயிற்றிலே ஃபோனை வைத்து பிறக்காத குழந்தையின் மேல் சபதம் எடுத்து... அது ஒரு வகையான டார்ச்சர்.

இந்தப் பக்கம் அஜித் என்னடாவென்றால் எம்.ஜி.ஆர். காலத்துக்கு முன்னாலிருந்து அண்மையில் மணிரதன்ம் வரைக்கும் எடுத்து முடித்துப் போரடித்துப் போன "மாணவர்கள் அரசியலுக்குள் நுழைந்து மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது" என்ற மிகப் பழைய கதையை எடுத்து.. அது இன்னொரு வகையான டார்ச்சர்.

ரெண்டுல எந்த டார்ச்சர் உசத்தியா இருக்குன்னு கேக்கிற மாதிரி நம்மளை மண்டை காய வைக்கிறாங்க.

அதுவும் லிங்குசாமி போன்ற இயக்குனரிடமிருந்தா இப்படி ஒரு அரதப் பழசான கதை? அதிர்ச்சியாக இருக்கிறது. என்ன நினைப்பில் எடுத்தார்களோ?

கல்லூரி மாணவராக அஜித் என்று கேள்விப்பட்டதும் ரொம்ப பயமாக இருந்தது. ஆனால் பரவாயில்லை, ஓரளவு மெலிந்திருப்பதால் அவரை ஏற்றுக் கொள்ள முடிகிறது. குறிப்பாக நின்று கொண்டிருக்கும் காட்சிகளில் மாணவர் தோற்றம் இருக்கிறது. உட்கார்ந்தால் தான் தொப்பை காட்டிக் கொடுத்து விடுகிறது.

முதல் காட்சியில் ஒட்டு தாடியுடன் அவர் வலம் வருவது பொருத்தமாகவே இல்லை. கண்றாவி.

ஃப்ளாஷ்பேக்கின் ஆரம்பத்தில் அஜித்தின் அப்பா விஜயகுமார் டீ மாஸ்டராக அறிமுகமாகிறார். அப்போதே தெரிந்து விடுகிறது, அவரைப் போட்டுத் தள்ளப் போகிறார்கள் வில்லன் கோஷ்டியினர் என்று. அப்புறம் அஜித்தைச் சுற்றி மூன்று நண்பர்கள் வேறு. அந்தக் கணக்கில் ஒருவருக்கு நாள் குறிக்கப்படும் என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனி. இப்படி அடுத்தடுத்து என்ன நடக்கும் என்று எளிதாக உணர்ந்து விடும்படி 'சின்னப் புள்ளைத்தனமாக' இருக்கிறது திரைக்கதை. ஒரேயடியாக சுவாரஸ்யமில்லாமல் போகிறது படம்.

கும்பகோணம் கலைக்கல்லூரியில் பயிலும் அஜித் மாணவர் தேர்தலில் நிற்கிறார். அவரை எதிர்த்து லோக்கல் எம்.எல்.ஏ.வின் மகன். அஜித்தின் சித்தப்பாவும் கட்சியில் இருப்பதால் அவரை வைத்து சமரசம் பேசி அஜித்தைப் பின்வாங்க வைத்து விடுகிறார் எம்.எல்.ஏ. இதற்கிடையில் பொதுத் தேர்தல் வரும்போது, எம்.எல்.ஏ.வை எதிர்த்து நேரடி அரசியல் களத்திலேயே நிற்கிறார் அஜித். ஜெயித்தும் விடுகிறார். ஆனால் அவரது தேர்தல் அலுவலகதிற்கு தீ வைத்து விட்டு அங்கு வெடிகுண்டுகள் இருந்ததாக வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்து, எம்.எல்.ஏ. தேர்தலில் ஜெயித்ததையும் தள்ளுபடி செய்து விடுகிறார்கள். ஜெயில் தண்டனை முடிந்து வரும் அஜித்.... yeah the same old crap.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பள்ளிப் பெண்ணாக வருகிறார் த்ரிஷா. தமிழ்த் திரையில் இதற்கு மேல் ஒல்லியாக ஒரு கதாநாயகி தோன்ற முடியாது என்று பந்தயம் வைத்துக் கொண்டு வந்த மாதிரி இருக்கிறார். என்னை மாதிரி ஜோதிகாப்ரியர்களுக்கு இன்னும் கொஞ்சம் அதிகமாகவே மண்டை காய்ந்தது.

விஜய் படத்துக்கு நல்ல நல்ல பாட்டுகள் போட்டுத் தரும் வித்யாசாகர், அஜித்துக்கென்றால் விளங்காத பாட்டுகள் போட்டுத் தருவதன் ரகசியத்தை யாராவது கண்டுபிடித்தால் புண்ணியமாக இருக்கும்.

மணிவண்ணனெல்லாமே வீனடிக்கப்பட்டிருக்கும் போது வெங்கட் பிரபு போன்றோரெல்லாம் வந்து போகிற நிலைமை தான். படத்தில் ஓரளவு ரசிக்கும் படியாக இருந்தவை ஆரம்பத்தில் வரும் அஜித்-த்ரிஷா இடையிலான மென்மையான சில காதல் காட்சிகள்.

ஆனால், எந்த விதமான கவர்ச்சியோ ஆபாசமோ இல்லாமல் சுத்தமாக படம் எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. அதற்காக மட்டும் வேண்டுமானால் பாராட்டலாம்.

படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வரும்போது சுவர்களில் சில போஸ்டர் வாசகங்கள்:

"ஏய் தறுதல இளைய தளபதியே!
மலயோடு வேண்டுமானால் மோது,
எங்கள் தலயோடு மோதாதே"

"எந்த சாமிக்கு அருள் வந்தாலும் சரி,
எப்பேர்ப்பட்ட பேரழகன் வந்தாலும் சரி,
மதுரயின் குதிரைக்கே கால் ஒடிந்து விட்டது(??!!)
இனிமேல் எங்கள் தலயோட ஆட்சி மட்டும் தான்"

அடேய்! அடேய்! பேச்சைக் கொறைச்சுட்டு ஒழுங்கா படத்தை எடுத்துத் தொலைங்கடா!!
Old Commenting System: |

Very Old Commenting System: