காதல்

நடிகர்கள்: முருகன், ஐஸ்வர்யா, ஸ்டீபன், கரட்டாண்டி, சித்தப்பா, மற்றும் நீங்கள் சந்தித்திருக்கக் கூடிய பலர்
இசை: ஜோஷுவா ஸ்ரீதர்
இயக்கம்: பாலாஜி சக்திவேல்

'காதல்-னு ஒரு படம் வந்திருக்கே, நீ இன்னும் பாக்கலியா, விமர்சனம் போடலியா, என்னத்த நீயும் திரை விமர்சனம்னு புளாக்கு வச்சி கழட்டுறே?' அப்படின்னு நம்ம பையங்க நெறைய பேரு அடிக்கவே வந்துட்டாய்ங்க. மக்கா, விடப்படாது இதன்னு இந்த வாட்டி பட்டணம் போயி பார்த்தேங்ணே. அடடா, சும்மா சொல்லக்கூடாது, வைகையாத்து வாடக் காத்து மாதிரி மனசை என்னமோ பண்ணிருச்சுண்ணே. மன்சை என்னமோ பண்ணிருச்சு. அம்புட்டு அழகா இருக்கு படம்.

முருகன்னு அப்படியே ஒரு எளந்தாரிப் பையனா மெக்கானிக் வேசம், நம்ம பரத்துக்கு. புகுந்து வெளாண்டிருக்காருல்லா. கிளிக்குச் செவந்த கணக்கா, மூக்கு மேல கோவத்த சொமந்துகிட்டு, அந்தப் புள்ள நடந்து போறத மறிச்சு பைக்கை நிறுத்திப்புட்டு "நாங்க என்ன கேணப்பயகளா? பொம்பளப் புள்ள மாதிரியா நடந்துக்கிடுறே? ஒரு அடக்க ஒடுக்கம் வேணாம்? எங்கிட்ட வச்சிக்கிட்ட, தரிசாயிருவே. போயிர்ர்றியேய்." அப்படின்னு சத்தம் போட்டுப் போவும் போது நமக்கே பதறுதே, அந்தப் புள்ள மனசு எம்புட்டுப் பாடுபட்டிருக்கும்.

மறுகிப் போய் வீட்டுல எதுவும் புடிக்காம இங்கிட்டும் அங்கிட்டும் கோவமாத் திரியும்போதே புள்ள "உக்காந்திருது". அந்த சமயத்துல ஒரு பாட்டு போடுதான் பாருங்க, அப்படியே மதுரை மண்ணோட பாரம்பரியத்த வெளங்க வைக்குது. அந்தப் புள்ளதேன் சந்தியா. அந்த மேனைக்கு 'நம்மளயும் ஒருத்தன் வந்து இப்படி அதிகாரம் பண்ணினானே'ன்னு அவம்மேல ஒரு பிடிப்பு வந்திருது. ஒரு வெக்கம், ஒரு சிரிப்புன்னு மனசுக்குள்ள கொஞ்சங்கொஞ்சமா அவன ஊத்தி வச்சுக்குறா.

அவன் மெக்கானிக் கடையைக் கடக்கும்போது ஒரு தலயக் குனிஞ்சு, அப்படியே சிரிச்சு வெக்கப்பட்டு, 'இந்த மாதிரி அடக்கமா இருந்தா உனக்குப் பிடிக்குமா?'ன்னு பார்வையாலயே விசாரிக்குதா. பயபுள்ளைக்கு ஒண்ணும் வெளங்க மாட்டேங்கு. மந்திரிச்சு விட்ட ஆடு மாதிரி ஆயிர்றான். அவ பின்னாலயே போறதும் வாரதுமா இருக்கான். அப்படியே பிக்கப்பு ஆவுதப்பா லவ்வு.

சந்தியாவுக்கு ஒரு சிநேகிதி வருதப்பா, லட்டு மாதிரி இருக்குதப்போய். புது வண்டி வாங்குன புள்ள, சிநேகிதி கிட்ட குடுத்து ஓட்டச் சொல்லி, மெக்கானிக் ஷெட்டு பக்கத்துல வரும்போது ஏதோ வயரைக் கழட்டி ரிப்பேராக்கிட்டு, 'அந்த ஷெட்டுல ரிப்பேர் பாக்கலாம்'னு சொன்னதும், ஒரு பார்வை பார்த்துட்டு, 'உங்க போதைக்கு நாங்க ஊறுகாயா?'ன்னு கேக்குது பாரு, அடேங்கப்பா, என்னமா இருக்கு.!

புள்ளயோட அப்பனைக் கண்டு மதுர ஜில்லாவே மிரளுது. அப்பேர்க்கொத்த ஆளு. 'சிங்கம்லே'ன்னு வண்டியில எழுதிக்கிட்டு சிங்கம் மாதிரித்தேன் ஊர்ல உலா வர்றாரு. அவருக்கு ஒரு தம்பி, நம்ம புள்ளக்கி சித்தப்பு. சாதிச் சண்டையில வெட்டு குத்துனு எறங்கி ஒரு கையப் பலி கொடுத்த ஆளு. அப்புறம், ஆத்தா, பெருத்தா, பாட்டி எல்லாரும் உண்டு வீட்டில.

படிக்கப் போறேன்னு சொல்ற புள்ளய அவசரமா மாமன் மகனுக்குக் கட்டிக் கொடுத்துற பேச்சு நடக்குது. என்ன செய்யன்னு புரியாம, பையனும் புள்ளயும் ஓடிப் போய் கல்யாணங் கட்டிக்கிடலாம்னு மெட்ராஸுக்கு வண்டியேர்றாய்ங்க.

மெக்கானிக் ஷெட்டுல ஒத்தாசைக்கு இருக்கான் பாருங்க, கரட்டாண்டி, அவனைப் பத்தி சொல்லாம விட முடியுங்களா? நயமான மதுரைக் குசும்பு புடிச்ச ஆளு. லந்து விட்டுக்கிட்டே திரியுறான். பொருத்தமான ஆளு தேன்.

பட்டணத்துல தெரிஞ்ச சிநேகிதனோட மேன்்ஷனுக்குப் போய் ரெண்டும் நிக்குதுங்க. அவனுக்கா அதிர்ச்சியா இருக்கு. பெறவு? இந்த மாதிரி செஞ்சுட்டு வருவாய்ங்கன்னு அவன் கண்டானா? ஏதோ ஒரு நாள் ஒப்பேத்தி அங்க இங்க வீடு தேடுறாய்ங்க. தரணுமில்லா? கல்யாணம் ஆகாம வீட்டைத் தொறந்து கூட ஒரு மரியாதக்கி யாரும் காட்டல. கெறங்கிப் போயிர்றாய்ங்க ரெண்டு பேரும். அப்புறம் ஒரு வழியா மக்க்யா நாளு ரோட்டோரமா கல்யாணம் கட்டிகிறாய்ங்க. மேன்ஷன்ல இருக்கிற சகோதரனுங்க எல்லாம் விழா எடுத்து விருந்து வச்சி கொண்டாடிப் போடுறாய்ங்க.

புள்ளயோட சித்தப்பு இருக்காரே, அவர் வக்கிறாரு எல்லாத்துக்கும் ஆப்பு. கையில்லாதவன்னு ஒரு எரக்கத்தை சம்பாதிச்சுக்கிட்டே எல்லாரையும் ஏமாத்தி ரெண்டு பேரையும் கண்டுபிடிச்சி, நயமாப் பேசி ஊருக்குக் கூட்டிட்டுப் போறாரு. அங்கின வைக்கிறாய்ங்க பாரு பயலுக்கு ஒரு பூசை, அடிங்கொக்கமக்கா.. உங்க வீட்டு அடியா எங்க வீட்டு அடியா..

பெறகென்ன? பிரிச்சிப் போடுறாய்ங்க நம்ம ஜோடிய. அவளும் தாலிய அத்துக் குடுத்துட்டு கெளம்பிர்றா, ஏதோ, அவன் உசிரோடயாவது இருப்பானேன்னு நம்பி. அப்புறம் நெஞ்ச நக்குற ஒரு க்ளைமாக்ஸோட படம் முடியுதப்போய்.

படத்தில வாற ஒவ்வொருத்தர் பண்ணியிருக்க அளப்பரயும் சாதாரணமானதில்லப்பு. புதுமொகம்னு சொல்றாய்ங்களே தவிர, அதுக்கான அறிகுறியே எங்கினயும் தெம்படல. பிச்சு ஒதறிட்டாய்ங்க.

மீசிக் நல்லாப் போட்டிருக்காரு புது ஆளு. ஒண்ணு ரெண்டு பாட்டு மனச அப்படியே பொரட்டிப் போடுது.

ஒண்ணு ரெண்டு கொறையும் இல்லாம இல்ல. காதல் வர்றதெல்லாம் அப்படின்னு சொடக்கு போடுற மாதிரி இருக்கு. எப்படி, எதுக்குன்னு இன்னுங்கொஞ்சம் சொல்லியிருக்கலாம். அதெ மாதிரி, கல்யாணம் ஆறவரைக்கும் 'முருகா, முருகா' அவனை வாய்நெறைய கூப்புடுற புள்ள, கல்யாணம் ஆனதும் அவனப் பாத்து, "என்னங்க"ன்னு சொல்றது அம்புட்டு நல்லா இல்ல. க்ளைமாக்ஸும் உண்மைச் சம்பவமா இருக்கே தவிர ரொம்ப நெகிழ்வுன்னுஞ் சொல்லிர முடியாது.

ஆனா கூட்டிக் கழிச்சுப் பார்த்தா, நல்ல படம்தேன். சீக்கிரம் கொட்டாயில போய் பாருங்க. மனசு நெறஞ்சு வருவீக.
Old Commenting System: |

Very Old Commenting System: